Friday, November 9, 2012

மார்கழி இரவுகள்...

இரவின் நிசப்த காகிதத்தில்
நவீன ஓவியமாய்
வண்டுகளின் ரீங்காரம்...

பல்வேறு ப்ருகா கமகங்களுடன்
தவளைகளின் இசைச் சங்கமம்

வாடையின் கரிசனத்தால்
சவாசனத்தில் மின்விசிறிகள்...

பனிகோர்த்த புள்ளிகளில்
வாகன இருக்கைகள்...

இலவச இணைப்பாய்
இருமலும் தும்மலும்....

நெருக்கத்தை உணர்த்தும்
இடைவெளி இறுக்கத்தில்
தளர்ச்சித் தனிமைகள்...

வழிபிறக்கும் தை நோக்கி
கற்பனை- கனவுகள் சுமந்து
கம்பளிக்குள் சுகமாய்
என் மார்கழி இரவுகள்....

No comments: